×

கோடாலி கருப்பூர் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் வண்டி பாதை அடைப்பு: விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு

தா.பழூர், பிப்.13: கோடாலி கருப்பூர் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் வண்டி பாதையை அடைத்து, அரசு தடுப்பு வேலி அமைப்பதை கண்டித்து விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாய நிலங்களுக்குச் சொல்லும் பாதையை அடைத்து தடுப்பு வேலி அமைத்தால் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் கோரிக்கை செய்தனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிக்கருப்பூர் கிராமத்தில் அண்ணகாரன்பேட்டை செல்லும் சாலை அருகே பொன்னமுத்தான் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு அருகில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நஞ்சை நிலங்கள் உள்ளன. இதில் நெற்பயிர்கள், உளுந்து பயறு உள்ளிட்ட தானியங்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்த விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தை பிரதான வண்டி பாதையாக பல வருடங்களாக விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அரசு சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாய நிலங்களுக்கு செல்லும் வண்டிப் பாதையை அடைத்து தடுப்பு வேலி கட்டும் பணிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலி அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையில் தடுப்பு வேலி அமைத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று வேலி அமைக்க முற்பட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தடுப்பு வேலி கட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், விவசாய நிலங்களுக்கு செல்லும் பிரதான வண்டி பாதையை அடைத்து தடுப்பு வேலி அமைப்பதால் இப்பகுதியில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் சம்பா நெற்பயிர்கள் பயிரிட முடியாது. எனவே விவசாய நிலங்களுக்கு செல்லும் வண்டி பாதையை ஒதுக்கி வேலி அமைக்கும் பணிகளை செய்ய வேண்டும். மேலும் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை முன்வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல் தடுப்பு வேலி அமைத்தால் அடுத்த கட்டமாக அப்பகுதியில் விவசாய பணியில் ஈடுபடும் 500 ஏக்கர் நிலப்பரப்புக்கான விவசாயிகளையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றனர்.

The post கோடாலி கருப்பூர் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் வண்டி பாதை அடைப்பு: விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kodali Karuppur village ,Tha.Bahur ,Kodali Karuppur ,Dinakaran ,
× RELATED தா.பழூர் பகுதி சாலையில் வேகத்தடைகளில் வர்ணம் பூசும் பணி